Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Tuesday, July 25, 2006

தமிழ்மண வம்புகளுக்கு ஒரு மாற்று

RIGHT TO INFORMATION ACT. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம்.

உங்களைப்பற்றி தெரியாது. ஆனால், எனக்கு இந்த சட்டத்தில் மிகவும் லயிப்பு ஏற்படுகிறது.

சமீப காலத்தில், நம் சர்க்கார் பண்ணின ஒரே நல்ல கார்யம் இது என்று நினைக்கிறேன். இந்த சட்டம் இந்தியாவில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்று தோன்றுகிறது.

இந்த சட்டம் தீர்மானமாக புழக்கத்தில் வந்து அதே சமயம் நம்மால் கொஞ்சமாவது உபயோகிக்கப்பட்டால் இது பல விழயங்களில் நம் அரசாங்கத்தை மேன்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த சட்டத்தை பற்றி அதிகமாக பிரசங்கம் பண்ண இங்கே நான் முனையவில்லை. இந்திய அரசாங்கத்திற்கான பல வெப்சைட்கள் இதற்காக இயங்குகின்றன. இதற்காக ஆர்வம் இருக்கிறவர்கள் அதற்கான பல விஷயங்களை இன்டர்நெட்டிலேயே பேஷாக பார்த்துக்கொள்ளலாம்.

இந்த சட்டத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கின்றன.

முதலாவது, இது எடுத்த எடுப்பிலேயே இந்திய சர்க்காரின் பழைய நூற்றுக்கணக்கான சட்டங்களை தூக்கி குப்பையில் போட்டு விடுகிறது. அதாவது, இந்த சட்டத்தின் பிரகாரம், வேறு எந்த சட்டமாவது இந்த சட்டத்துக்கு விரோதமாக இருந்தால், அந்த விரோதமான பழைய சட்டம் செல்லாது. இங்கு இந்த சட்டம் மட்டும்தான் செல்லும். அதாவது, இந்த சட்டமே வேத வாக்கு (இல்லை பெரியார் வாக்கு என்று வைத்துக்கோங்களேன்!)

இரண்டாவது, இந்த சட்டம் நம் சோப்ளாங்கி சர்க்காரின் முதலாவது ‘ரிவர்ஸ்” பொறுப்பான சட்டம்.

அதாவது, இந்த சட்டத்தில்தான் 30 நாளுக்குள் நம் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் ஆட்டோமாட்டிக்காக அந்த சர்க்கார் டிபார்ட்மெண்டும், அந்த ஆபீஸரும் தப்பு பண்ணினார்கள் என்று சட்டமே தீர்மானித்துக்கொள்ளும்.

அதாவது, இத்தனை நாளுக்குள் இந்த விஷயத்தை செய்து முடிக்கவேண்டியது இந்த சர்க்கார் குமாஸ்தாக்களின் கடமை என்று இப்போதுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எல்லா சட்டத்திலும் இது மாதிரி வந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் (கனவு கண்டுதான் பாருங்களேன்.) ஒரு மாசத்தில் ரேஷன் கார்ட் கொடுக்காவிட்டால் ஃபைன். இரண்டு மாசத்தில் பேஷண்ட் குணமாகாவிட்டால் ஃபைன். பத்து மாசத்தில் பாலம் கட்டாவிட்டால் சிறை. ஒரு வருஷத்தில் ஸ்கூல் வித்யார்த்திகள் பாஸ் ஆகாவிட்டால் வாத்யாருக்கு சம்பளம் கட். என்றெல்லாம் வந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்.

ஆனால், இது இப்போதைக்கு இந்த இன்ஃபர்மேஷன் சட்டத்தில் தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மூன்றாவது விஷயம். இந்த சட்டத்தில் ஒரு ஃபார்மாலிட்டீஸூம் இல்லாததுதான். இல்லாவிட்டால், வழக்கமான எல்லா சட்டங்களை மாதிரி, ஒரு பதினைந்து ஃபாரம், இருபது ரூல்ஸ் என்றெல்லாம் போட்டு இந்த சட்டத்தை தொட்டிலிலேயே கழுத்தை நெருக்கி ஊருக்கு அனுப்பியிருப்பார்கள்.

ஆனால், இந்த சட்டம் முதல் தடவையாக, ஒரு மூளையுள்ள ஒரு மஹானுபாவனால் எழுதப்பட்டிருக்கிறது.

அதாவது, இந்த சட்டத்தில் நீங்கள் ஒரு பதினைந்து பைசா போஸ்ட் கார்டில் ஒரு லெட்டர் போட்டால் போறும். ஒரு பார்ம், பார்மாலிடி என்று எந்த புண்ணாக்கும் தேவையில்லை. யாருக்கு எழுத வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டாம். “Public Information Officer” பொது தகவல் வழங்கும் அதிகாரி என்று எழுதி (அது எழுதக்கூட வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள்) அந்த ஆபீஸில் குடுத்துவிட வேண்டும். எந்த பிராஞ்சிலும் இதை கொடுக்கலாம். அதை அவர்கள் வாங்கி சரியான இடத்துக்கு அனுப்ப வேண்டும்.

சரி, ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையா. நோ ப்ராப்ளம். உங்கள் ஊர் கலெக்டர் ஆபீஸிக்கு அந்த போஸ்ட் கார்டை எழுதினால் அவர்கள் அதை சரியான குமாஸ்தாவை கண்டுபிடித்து கொடுத்துவிடுவார்கள்.

சரி சார், எனக்கு கலெக்டர் ஆபீஸ் கூட தெரியாது, சரியான பேக்கு என்கிறீர்களா. நோ ப்ராப்ளம். எந்த கவர்ண்ட்மெண்ட் ஆபீஸிலும் நுழைந்து இந்த கார்டை கொடுத்தால் எந்த ஒரு கவர்ண்ட்மெண்ட் ஆபீஸூம் இதை சம்பந்தப்படுத்த குமாஸ்தாவிடம் கொடுத்துவிடுவார்களாம்.

பேஷ்! பேஷ்! கேட்க பரம மங்களமாய்த்தான் இருக்கிறது.

ஒரே ஒரு சிலவு, நீங்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே இருந்தால், இதற்கு 10 ரூபாயோ என்னவோ சேர்த்து அனுப்ப வேண்டுமாம். இது டெல்லி சர்க்காருக்கான சார்ஜ். வழக்கம்போல, இங்கு தமிழ்நாட்டு திராவிட குஞ்சுகள் இதை இன்னும் கஷ்டமாக்கி தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்தியாவிலேயே உசத்தியாக 50 ரூபாய் சார்ஜ் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சரி, மேட்டருக்கு வருகிறேன். என்ன கேட்கலாம் என்றுதானே கேட்கிறீர்கள். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.

எங்கள் வீட்டு வாசலில் குப்பை அள்ள காண்ட்ராக்ட் யாருக்கு? கடந்த நாலு மாசத்தில் யார் யார் குப்பை அள்ளினார்கள்? எத்தனை மணிக்கு அள்ளினார்கள்? அவர்களின் வருகை ஜப்தா காப்பி கேட்கலாம்.

எங்கள் ஊர் ரோட் காண்ட்ராக்ட் எந்த கரை வேஷ்டிக்கு போய் இருக்கு? அதை எந்த இஞ்சினியர் பார்த்தார்? அதன் ரிகார்ட் என்ன?

வேணும் என்றால், நீங்களும் அவருடன் கூட ரோட் போடுவதை இன்ஸ்பெக்ஷன் பண்ண ப்ரியம் என்று சொன்னால், உங்களை அவர்கள் அழைக்க கடமைப்பட்டவர்கள். நீங்கள் கேட்டால் அந்த ரோட்டின் சாம்பிளும் வாங்கிக்கலாம். கொடுக்க கடமைப்பட்டவர்கள். அதை டெஸ்ட் லேபில் கொடுத்தால் அந்த ரோடு எத்தனை மாதம் வரும் என்று சொல்லி விடுவார்கள்.

சரிசார். இந்த மாதிரி பொதுநல சேவைதானா? எனக்கு பர்ஸனலாக என்ன ப்ரயோஜனம் என்று கேட்கிறீர்களா? (நான் கேட்டேன்). நீங்கள் கொடுத்த ரேஷன் கார்ட், கரண்ட் கனெக்ஷன், லிப்ட் லைசன்ஸ், எல்லாத்துக்கும் இப்படி கேட்கலாம்.

எத்தனை நாள் என் பேப்பர் ஒவ்வொருத்தர் டேபிளிலும் இருந்தது என்று லிஸ்ட் கேட்கலாம். அந்த ஆபீஸர்கள் எல்லாம் அந்த பேப்பரில் என்ன செய்தார்கள்? தேதிவாரியாக சொல்லுங்கள் என்று கேட்கலாம். நார்மலாக உங்கள் ஆபீஸ் விதிப்படி எத்தனை நாளாகும்? லேட் ஆகியிருந்தால், ஏன் காலதாமதம் ஆனது. இப்படி லேட் பண்ணினதுக்கு அவர்கள் மேலே என்ன ஆக்ஷன் எடுக்கப்பட்டது? இப்படி தாறுமாறாக எல்லாம் கேட்கலாம்.

நிறைய விஷயங்களில் இப்படி கேட்டாலே வேலை நடந்துவிடுகிறது என்று பல சங்ககாரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நிறைய சங்கங்கள் இதில் முனைந்து உங்களுக்கு சரியான பதில் வருவதற்கு எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கத்துக்கொடுக்கிறார்கள். (என் வீட்டில் இதில் ஒரு குரு இருக்கிறாள் - என் பார்யாள். அதனால், சங்கம் தேவையில்லை...)

இவ்வாறான காரணங்களால், பல ஸ்தாபனங்கள் இந்த சட்டத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றன. டெல்லியில் பரிவர்தன் (www.parivartan.org) என்ற சங்கத்துக்காரர்கள் இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு காலனியையே திருத்திவிட்டார்களாம். படித்துப்பார்த்தால் ஆச்சரியமாகத்தான இருக்கிறது.

போன வருஷம் தான் லண்டனிலும் இப்படி ஒரு சட்டம் வந்ததாக சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் இந்த வேகம் ரொம்ப ச்லாக்யம்தான்.

இந்த சட்டத்தை பார்த்து பயந்துபோன நம் குமாஸ்தாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். போன வாரம், புதுசாக, இந்த சட்டத்தில் ஒரு ஓட்டை போட்டிருக்கிறார்கள். அதாவது, குமாஸ்தாக்கள் ஃபைல்களில் போட்ட நோட்ஸ்களை யாரும் கேட்க முடியாது என்று. அவர்கள் போட்ட நோட்ஸ்கள் அவர்களுக்கே புரியாது. அதனால், இது ஒன்றும் பெரிய குறை இல்லை.

கடந்த ஒரு மாசமாக மெட்ராஸிலும் இது பற்றி பல சத்சங்கங்கள் நடத்தினார்கள். இதனால், பல பேருக்கு இது பற்றி தெரிய வந்திருக்கிறது.

போன ஞாயிற்றுக்கிழமை என் மைலாப்பூரில் நடந்த மீட்டிங்குங்கு போனேன். CAG என்ற ஸ்தாபனக்கார்ர்கள் தலைமையில் நன்றாக ஏற்பாடு செய்திருந்தார்கள். (chennairti.googlepages.com)

இதில் எனக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் இதுதான். இதில் வாலண்டீர்கள் எல்லோரும் சின்ன இளைஞர்கள். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

குரு என்பவர் இந்த சட்டத்தை பிரசங்கம் செய்து அறிமுகப்படுத்தி அனுபவ பூர்வமாக சொன்னார். சாரதா என்ற ஒரு இளைஞி இதுவரை இந்த சட்டம் என்ன சாதித்திருக்கிறது என்று சின்னதாக பேசினாள். அருண் என்று ஒரு வக்கீல் கேள்வி கேட்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுத்தார்.



முத்தாய்ப்பாக, ப்ரபு என்று ஒரு க்ருஸ்துவ எவாஞ்சலிஸ்ட் பாதிரி எதேச்சையாக கேள்விப்பட்டு உள்ளே வந்து பேசினார்.

மிகவும் ப்ராக்டிகலாக, நெகிழ்ச்சியாக அவர் பேசினார். க்ருஸ்துவ தர்மத்தை ஒருவன் பாலோ பண்ணினால், அவன் லஞ்சம் கொடுக்க கூடாது என்று சொன்னார். (அப்படி பார்த்தால், க்ருஸ்துவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கிடையாதுதான்) அது அவர்கள் வேதத்துக்கு விரோதமாம்.

அவர் வாழ்நாள் முழுக்க ஒரு பைசா லஞ்சம் கொடுத்ததில்லை என்று சொன்னார். (நான் அவர் பேச்சை நம்புகிறேன்). இத்தனைக்கும் அவர் ஒரு பிஸினஸ்மேன்.

பின்னார், எம்.எல்.ஏ. சேகர் பேசினார் (அவரும் எதேச்சையாக உள்ளே நுழைந்தவர் என்றார்) நன்றாக இருந்தது.

அந்த படங்களை இங்கு கொடுத்திருக்கிறேன்.



நாம் இப்போதெல்லாம் மாங்கு மாங்கு என்று தமிழ்மணத்தில் நிறைய எழுதுகிறோம்.

வாஸ்தவத்தில் பார்த்தால், பல விஷயங்கள் கவைக்கு உதவாததாக இருக்கின்றன. வேறு சில, பலரை வம்புக்கு இழுக்கின்றன. மேலும் சில, சுயபுராணம் படிக்கின்றன. மேலும் சில, என் அபிப்ராயம் இப்படி என்று கருத்து திணிப்பு பண்ணுகின்றன.

இந்த மாதிரி அக்கப்போரில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். அதோடு, அதில் கொஞ்சம் நிறுத்திக்கொண்டு (அல்லது இன்னும் விசேஷ டயத்தில்) நாம் எல்லோரும் மாசத்துக்கு ஒரு லெட்டராவது இந்த சட்டத்து பிராகாரம் எழுத வேண்டும்.

சின்ன வம்பு வேண்டுமானால், ரோடில் லைட் எரியவில்லை என்று கார்பரேஷனுக்கு எழுதலாம். இல்லை, என் பக்கத்து ரோடை ஆக்கிரமித்து நடக்கும் ஒரு கடை ஏன் லைசன்ஸ் கொடுத்தீர்கள் என்று எழுதலாம்.

பெரிய லெவலில் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால், டெல்லி சர்க்காருக்கு, என் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான பட்ஜெட், வரவு செலவு என்று கேட்டு எழுதலாம்.

அதுவும் இல்லை, சண்டைதான் வேண்டுமானால், பக்கத்து பில்டிங் CMDA வில் அப்ரூவல் ஆகியிருக்கிறதா, அது சரியாக கட்டப்பட்டிருக்கிறதா என்று குடையலாம்.

ஆக மொத்தம், எல்லோரும் இதில் கொஞ்சம் உற்சாகம் காட்டினால், இந்த சட்டம் நிஜமாகவே நம் எல்லாருக்கும் ஒரு வரபிரசாதம் என்று தோன்றுகிறது. இந்த குமாஸ்தாக்கள் இந்த சட்டத்தை இன்னும் கெடுக்கும் முன்னே நாம் முந்திக்கொள்ள வேண்டும்.

19 Comments:

At 6:36 am, Blogger Muthu said...

ஜெயராமன்,

எள்ளல், சாதி வெறி, மதவெறி எல்லாவற்றையும் நீக்கிவிட்டு போட்டீர்கள் என்றால் இது ஒரு மிக நல்ல கட்டுரை.

(இல்லாவிட்டாலும் நல்ல கட்டுரைதான்)

 
At 7:00 am, Blogger ஜயராமன் said...

முத்து சார்,

சரியாகத்தான் சொன்னீர்கள்.

கொஞ்சம் கேஷூவலாக எழுதினதால் இம்மாதிரி இடக்காக பல வார்த்தைகளை போட்டிருக்கிறேன்.

கொஞ்சம் மாற்றிவிட்டேன். பாதிரியாரை எனக்கு ரொம்பவும் பிடித்ததால் அவரைப்பற்றின கிண்டலை எடுத்துவிட்டேன்.

மற்றபடி எல்லாம் நம்பளுக்குள்ள தானே. அதுனால அந்த கமெண்டுகளில் தோஷமில்ல. ஹி! ஹி

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

 
At 7:07 am, Anonymous Anonymous said...

திராவிட குஞ்சிகளுக்கு புரியரா மாதிரியும் கொஞ்சம் 'அவாள்' பாஷையை தவிர்த்திருக்கலாம்.

 
At 7:11 am, Blogger ஜயராமன் said...

அனானி சார்,

சரியாக சொன்னீர்கள்.

இந்த அவாள் பாஷை எழுதுவது ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், இங்கு தமிழ்மணத்தில் சில பேர் ரொம்ப சொல்கிறார்களே என்று ரொம்ப கஷ்டப்பட்டு இதை ப்ராக்டீஸ் பண்ணினேன். பின்னாடி எழுதினேன். ஒரு சேஞ்சுக்குத்தான். எப்படி ப்ராக்டீஸ் என்று கேட்கிறீர்களா. பழைய 'கல்கியின் கட்டுரைகள்' என்ற புஸ்தகம் படித்து பல வார்த்தைகளை காப்பியடித்தேன்.

படித்து சும்மா கிண்டலடிச்சுட்டு போங்க. நத்திங் சீரியஸ் ப்ளீஸ்!

 
At 7:12 am, Blogger Muthu said...

நன்றி ஜெயராமன்,

நமக்குள்ள ஆயிரம் வம்பு:)) அது தனி..இந்த கட்டுரை அருமையான கட்டுரை..திசை மாறக்கூடாது என்பதால் அப்படி சொன்னேன்...

நன்றி..

 
At 10:04 am, Anonymous Anonymous said...

keep on writing such good news to us..one doubt can i use this RTI act on Private agencies and companies such as Bharathgas ( as i have a issue on them )

 
At 11:12 am, Blogger ஜயராமன் said...

dear friend,

///Bharathgas ( as i have a issue on them ) ///

definitely.

this act covers

(a) all government departments

(b) all government corporations (like air-india, ongc, bharat gas etc)

and

(c) any company which is partly or fully financed / helped by government.

so, almost any public sector is covered.

please contact the phone number given in my link.
they will help you in making an official complaint. you will definitely get this resolved.

any help, pl give me an email.

and, let us know your experience.

thanks

jay

 
At 12:16 pm, Blogger Unknown said...

நல்ல கட்டுரை ஜயராமன்

ஊழலை ஒழிக்க விஜய்காந்த் தேவையில்லை:-)இதை சரியா அமுல்படுத்தினாலே போதும்.பழைய பிரிடிஷ் சட்டங்களையே வைத்துக்கொண்டு இன்னும் இந்த விஷயத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.அமெரிக்காவில் இந்த சட்டம் ஜனநாயகத்தை வளர்க்க எப்படி உதவியிருக்கிறது தெரியுமா?

 
At 2:17 pm, Blogger துளசி கோபால் said...

அருமை. படிக்கும்போதே எனக்கு 'கல்கி' ஞாபகம் வந்தது.

அப்புறம் பின்னூட்டத்தில் நீங்களே சொல்லிவிட்டீர்கள். ச்லாக்யம்.

ஆமாம், இதை வெளிநாட்டு இந்தியன் கேக்கலாமா?

 
At 8:42 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் ஸார்,

உபயோகமான விஷயம். வாழ்த்துக்கள். நன்றிகள்.

எனக்கொரு யோஜனை தோன்றுகிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி ப்ளாக்கர்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன செய்கிறார்கள் என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டங்களாக இடலாமே.

 
At 9:31 pm, Blogger ஜயராமன் said...

செல்வன் சார்

///அமெரிக்காவில் இந்த சட்டம் ஜனநாயகத்தை வளர்க்க எப்படி உதவியிருக்கிறது தெரியுமா?////

இதைப்பற்றி தாங்கள் ஒரு பதிவாவது தயை செய்து போட்டு எங்களுக்கு அங்கு நடப்பவைகளை கொஞ்சமாவது காட்டிக்கொடுங்கள். அமெரிக்காவை பற்றி கொஞ்சமாவது உசத்தியாக தமிழ்மணத்தில் கொஞ்சம் கேட்டா மாதிரியாவது இருக்கும்.

துளசி மேடம்,

///ஆமாம், இதை வெளிநாட்டு இந்தியன் கேக்கலாமா?///

கேட்கலாம். இந்திய பிரஜையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு கண்டிஷன். (நீங்கள் இன்னும் இண்டியா பாஸ்போர்டுதானே?) ஆனால், பதில் வெளிநாட்டுக்கு அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஈ-மெயில் விலாசம் கொடுத்து அதில் பதில் அனுப்ப சொன்னால், அனுப்ப வேண்டும் என்றும் இந்த சட்டம் சொல்கிறது. 10 ரூ இல்லை 50 ரூபாய் என்று தேவைக்கு ஏத்த மாதிரி ஒரு மெட்ராஸ் டிராப்ட் வாங்கி அனுப்ப வேண்டும்.

இந்திய தூதரகங்களும் இந்த சட்டத்தில் வருவதால், நீங்கள் காண்சுலேட்டிலும் இந்த லேட்டரை கொடுக்கலாம். வாங்கி கொள்ளுவார்கள்.

இல்லை, லோகல் அட்ரஸ் இண்டியாவில் இருந்தால் அந்த விலாசத்தை போட்டு லெட்டர் போடலாம். சுலபமாக போகும்.

எழுத்துப்பிழை சார்,

தவறுகளை சொன்னதற்கு தாங்க்ஸ். சரி செய்து விட்டேன். எறியவில்லை - Does not Burn. எரியவில்லை - Did not throw என்று அர்த்தமாகும் என்று நினைக்கிறேன். அதனால், நான் எறியவில்லை என்றே போட்டிருக்கிறேன். சரிதானே?

ம்யூஸ் சார்,

///இந்த சட்டத்தை பயன்படுத்தி ப்ளாக்கர்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன செய்கிறார்கள் என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டங்களாக இடலாமே.///

பேஷாக. இது ரொம்ப நல்ல யோஜனைதான். ஆனால், இங்கே திடீர் திடீர் என்று மனதுக்கு தோணினதை மேலோட்டமாகவே எழுதவே நிறைய கும்பல்கள் இருக்கின்றன. (இது குத்தமாக இல்லை. வாஸ்தவத்தை சொன்னேன்.) இந்த மாதிரி ஆழமாக எழுதினால் எல்லோருக்கும் ப்ரயோஜனம். எல்லோருக்கும் இதில் ஆசை என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

பின்னூட்டம் இட்டு இந்த பதிவை சிறப்பித்த உங்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி

ஜயராமன்

 
At 9:44 pm, Blogger Unknown said...

//அமெரிக்காவை பற்றி கொஞ்சமாவது உசத்தியாக தமிழ்மணத்தில் கொஞ்சம் கேட்டா மாதிரியாவது இருக்கும்.//


ஏற்கனவே இரண்டு பதிவு போட்டாச்சு:-))

http://holyox.blogspot.com/2006/01/blog-post_113790747096541122.html

http://holyox.blogspot.com/2006/03/5766.html

 
At 9:47 pm, Blogger துளசி கோபால் said...

மறுபடிக்கு நன்றிங்க ஜெயராமன்.

இந்தியா பாஸ்ப்போர்ட் இல்லீங்களே.
அப்ப நான் வாயைத் திறக்க முடியாதுன்னு சொல்லுங்க :-)))))

 
At 10:26 pm, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அதாவது, இந்த சட்டமே வேத வாக்கு (இல்லை பெரியார் வாக்கு என்று வைத்துக்கோங்களேன்!)

:-)))

 
At 11:31 pm, Blogger ஜயராமன் said...

சிவஞானம் ஐயா,

//பார்த்தீர்களா? இங்கு நீங்கள் எஸ்விசேகர் வந்த கூட்டத்துக்குத்தான் சென்று இருக்கிறீர்கள்.///

என்ன சார் இப்படி சிண்டு முடிந்து விடுகிறீர்கள். :-))))

என்ன பண்ணுவது. ஞாயிற்றுகிழமையில் நம்ப ப்ளாக் மீட்டிங்கைத்தான் காணோம். ஏதாவது பண்ணுவோம் என்று செய்கிறோம்.

ஆனால், அங்கு போண்டா கிடைக்கவில்லை. ....

நன்றி

 
At 11:47 pm, Blogger ஜயராமன் said...

துளசி மேடம்,

///அப்ப நான் வாயைத் திறக்க முடியாதுன்னு சொல்லுங்க :-)))))///

நேரிடையாக பார்த்தோம் என்றால் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால், யார் வேணும் என்றாலும் எதைப்பற்றியும் கேட்கலாம் என்று இருக்கிறது. ஏன் கேட்கிறோம் என்று காரணம் சொல்ல வேண்டாம். நான் மைலாப்பூரில் உட்கார்ந்து கொண்டு காஷ்மீர் துலுக்கர்கள் எத்தனை தீவிரவாத அமைப்புகளை நடத்துகிறார்கள் என்று கேட்கலாம். தப்பு இல்லை. அதனால், உங்கள் அத்தங்கா, அம்மாஞ்சி, சித்தப்பு யாரையாவது விட்டு கேட்க சொல்லுங்களேன்.

யாராவது உங்கள் சொந்தத்தில் ஒரு துரதிருஷ்டசாலி இன்னும் இண்டியாவில் இல்லாமலா போய் விடுவார்கள்? :-)

நன்றி

 
At 12:21 am, Blogger ஜயராமன் said...

எழுத்துப்பிழை சார்,

///எறியவில்லை : எரியவில்லை////

ஆகா, சூபராக இருக்கிறது தங்கள் பணி. தவறை திருத்திக்கொண்டேன்.

உருப்படியாக தமிழ்மணத்தில் இன்று தங்களால் ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன்.

நன்றி

 
At 11:34 pm, Blogger ஜயராமன் said...

இந்த பதிவு சம்பந்தமாக ஒரு கொசுறு செய்தி.

நேற்று CNN-IBN செய்தி சேனலில் இந்த RTI சட்டத்தை பயன்படுத்தி மத்திய பிரதேச எம்.பி.க்களின் தகிடுதத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இந்த மத்தியபிரதேச எம்.பி.க்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ரயில்வே இலவச பாஸை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ரயில்வேயிடமிருந்து கிடைத்த ரெகார்டுபடி இந்த எம்.பிக்கள் கிட்டத்தட்ட தினசரி ஏதாவது ஒரு ரயிலில் பாஸை உபயோகித்து பயணம் செய்திருக்கிறார்கள். இது ஒரே சமயத்தில் கூட சில சமயம் நடந்திருக்கிறது. ஒரு எம்.பி. ஒரே நாளில் பத்து ரயிலில் பாஸ் உபயோகித்திருக்கிறார். இது அந்த பாஸை பலரும் சட்ட விரோதமாக உபயோகித்திருக்கிறார்கள் என்று நிரூபணம் ஆகிறது. பல லட்சக்கணக்காக ரூபாய இதனால் தொடர்ந்து ரயில்வேக்கு இழப்பு ஏற்படுகிறது.

இதை RTI ஆக்ட்டில் போட்ட அப்ளிகேஷனில் கிடைத்த ரெகார்டுகள் காட்டிக்கொடுத்து விட்டன.

நன்றி

 
At 3:40 am, Anonymous Anonymous said...

Idhu oru nalla katturai. Enakku thamil illadhadhal ezhudha mudiyavillai. Enave, thamizhai aangilanthil ezhudhi ullen. Mannikkavum.

Ippadikku,

Noida(RTI) Nagarajan

 

Post a Comment

<< Home